துறவியின் பகல் கனவு
முன்பொரு காலத்தில் ஒரு சோம்பேறி துறவி வாழ்ந்து வந்தார். ஏழையாகவும் அவர் இருந்தார். பெரும் செல்வந்தனாகும் கனவோடு அவர் இருந்தாலும் உழைப்பை நம்பாதவராக திகழ்ந்தார். அன்றாடம் கையேந்தி உணவு அருந்திய அவருக்கு ஒரு நாள் அதிகாலையில், ஒரு குடம் பால் பிச்சையாக கிடைத்தது. அதை பெற்றுக் கொண்ட அவர், மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றார். பின்பு பாலை கொதிக்க வைத்து அதிலிருந்து சிறிது அருந்தி விட்டு மிச்சம் உள்ள பாலில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்தார். அதன் பின் ஆனந்தமாக உறங்கச் சென்று விட்டார்.
உறங்குகையில் அவர் கனவு காணத் தொடங்கினார். எப்படியாவது பணக்காரனாகி எல்லா துன்பத்திலிருந்தும் விடு பட வேண்டும் என்று கனவு கண்டார். அப்போது அவர் கவனத்தில் தயிராக உறைக்கப் பட்ட பால் குடம் வந்தது. "ஆஹா, நாளை இந்த பால் எல்லாம் தயிராக உறைந்து விடும். நான் அந்த தயிரைக் கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை சூடாக்கி நெய் ஆக்குவேன். அந்த நெய்யை சந்தையில் விற்றால் பணம் கிடைக்கும். அப்பணத்தை கொண்டு ஒரு கோழி வாங்குவேன். அந்தக் கோழி பல முட்டைகள் இடும். அம்முட்டைகள் எல்லாம் குஞ்சுகள் பொரிக்கும். அவை வளர்ந்து கோழிகள் ஆகி மேலும் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடும். இப்படியே போனால் நான் ஒரு பெரும் கோழி பண்ணைக்கு அதிபர் ஆகிவிடுவேன்". இவ்வாறு அவர் கற்பனை நீண்டுக் கொண்டே போனது.
" இப்போது அந்தக் கோழிகளை எல்லாம் விற்று விட்டு சில காராம் பசுக்களை வாங்குவேன். பின்பு ஒரு பால் பண்ணை தொடங்குவேன். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் என்னிடத்தில் பால் வாங்கி போவார்கள். நான் பெரும் பணக்காரனாகி பொன் நகைகள் வாங்கி குவிப்பேன். அந்த நகைகளை இந்த நாட்டின் அரசன் என்னிடமிருந்து வாங்கிக் கொள்வார். மேலும் செல்வந்தனாகி என்னை காட்டிலும் செல்வம் படைத்த குடும்பத்திலிருந்து ஓர் அழகான இளம் பெண்ணை மணப்பேன். விரைவில் எங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் ஏதேனும் குறும்பு செய்தால் நான் ஆத்திரமாகி அவனுக்கு பாடம் புகட்டுவேன். நீண்ட குச்சியை எடுத்து அவனை விளாசி தள்ளுவேன்", என்று கனவை தொடர்ந்த அவர், தன்னையும் அறியாமல் அருகில் இருந்த குச்சியை எடுத்து காற்றில் வீசினார். 'டப்' என்ற சத்தத்துடன் அவர் தூக்கமும் கனவும் சேர்ந்தே கலைந்தது. அவர் ஆசையாக கொண்டு வந்த பால் குடம் சுக்கு நூறாக தரையில் கிடந்தது.
கதையின் நீதி : உழைப்பிற்கு மாற்று ஏதுமில்லை. உழைப்பில்லாத எந்த கனவும் பலித்திடாது.