கேரட் சாதம்
கேரட்டை ‘தாவரத் தங்கம்’ என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதே ! புற்றுநோய் வராமல் தடுப்பதில் கில்லாடியான கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டில் எளிதாக செய்யக்கூடிய ஒரு சாத வகை இதோ உங்களுக்காக :
தேவையான பொருள்கள் :
பச்சரிசி சாதம் - 2 கப் ; வேக வைத்தது
கேரட் - 1 கப் ; துருவியது
பெரிய வெங்காயம் – 1 ; நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி - 1 ; சன்னமாக நறுக்கியது
புதினா இலைகள் - 10
பச்சை மிளகாய் - 4 ; நீளவாக்கில் வெட்டியது
முந்திரி பருப்பு - 10 ; இதற்கு பதிலாக வேர்க்கடலையும் பயன்படுத்தலாம்
இஞ்சி பூண்டு பசை - 1 மேஜை கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
லவங்கம் - 3
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 1
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை - நறுக்கியது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
1) ஓரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும்
2) லவங்கம், பட்டை, ஏலக்காய்யை வதக்கி முந்திரி சேர்த்து வறுக்கவும்
3) முந்திரி சிவந்ததும், புதினா இலைகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
4) வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பசையை ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை நன்றாக கலக்கவும்.
5) இப்போது துருவிய கேரட்டை இணைத்து, உப்புடன் வதக்கவும்.
6) மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
7) பச்சை வாசனை போனதும், சமைத்த சாதத்தை போட்டு கிளறி, கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment