வறுத்த கோழி
கோழி சூப் புடன் அருமையான ஆரம்ப உணவாக வறுத்த கோழி சாப்பிடலாம். இது சாம்பார் சாதம், ரஸம் மற்றும் தயிர் சாதத்தோடு ருசியாக இருக்கும்.
தேவையான பொருள்கள் :
கோழி துண்டுகள் - ½ கிலோ
இஞ்சி – 1 இன்ச் துண்டு
பூண்டு – 5 பல்; உரித்தது
கெட்டி தயிர் - ½ கப் ; கடைந்தது
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
கோழி மசாலா (அ) கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
சன்னமாக நறுக்கப்பட்ட வெங்காயம் - அலங்கரிக்க
கொத்துமல்லி இலை - அலங்கரிக்க
செய்முறை :
1) கோழியை நன்கு கழுவவும். இஞ்சி பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
2) ஒரு அகலமான கிண்ணத்தில் கோழித் துண்டுகள், இஞ்சி பூண்டு பசை, கடைந்த தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கோழி மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3) பிறகு, ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை வைத்து, கொஞ்சமாக நீர் தெளித்து, மூடியால் மூடி, கோழி வேகும் வரை சமைக்கவும்.
4) கோழி வெந்தவுடன், மூடியை திறந்து மிச்சம் இருக்கும் நீர் எல்லாம் காயும் படி சமைக்க வேண்டும். கோழி மிகவும் வெந்து விடாமல் பார்த்து கொள்வது அவசியம். மசியும் அளவுக்கு வெந்து விட்டால், வறுப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.
5) கடைசியாக, மிளகு தூள் சேர்த்து, கோழி மசியாமல் நன்கு கிளறவும்.
6) இதை 30 நிமிடங்கள் ஆற விடவும். ஆற வைப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஏனென்றால், சூடான கோழியை வறுத்தால், மசிந்து விடுவதோடு சரியாக வறுபடாது.
7) ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி, 3-4 கோழி துண்டுகளை அதில் வைத்து, திருப்பி திருப்பி நன்கு வறுத்து எடுக்கவும். இவ்வாறே மற்ற எல்லா துண்டுகளையும் பொறுமையாக வறுக்கவும்.
இந்த மசாலா கலவையுடன் சிறிதளவு ஒயிட் கார்ன் மாவு அல்லது மைதா சேர்த்துகொண்டால் மசாலா உதிராமல் இருக்கும்.
ReplyDeleteஅஹா... உங்க யோசனையும் நல்லா தான் இருக்கு. நானும் அதை பின்பற்றுவேன்.
ReplyDeleteஉங்கள் கருத்திற்கு நன்றி ராஜசேகர் !