Social Icons

.

Friday, September 9, 2011

அட பிரதமன் .....


அட பிரதமன்

கேரளக் கரையோரம் செய்யப்படும் பாயச வகைகளில் ஒன்று அட பிரதமன் ஆகும். 'அட' என்றால் அரிசி மாவு துண்டுகளையும்,  'பிரதமன்' என்றால் அவ்வரிசி துண்டுகள் சேர்க்கப்படும் இனிப்பு சுவை மிகுந்த தேங்காய் பாலையும் குறிக்கும். பிரதமன் என்றால் 'முதன்மை' என்பதையும் குறிப்பதால்பாயாசங்களில் முதல் இடத்தை இது வகிக்கிறது. கேரள இல்லங்களின் அனைத்து விழாக்களிலும் இது முக்கியமாக சமைக்க படுகிறது. இதன் திவ்யமான சுவை, உண்போர் மனதை கொள்ளை கொள்கிறது. முக்கியமாக, ஓணப்  பண்டிகையின் 'ஓண சந்த்யா' வேளையில் இது படைக்கப் படுகிறது !



தேவையான பொருள்கள் :

அட மாவு தயாரிக்க :
அரிசி – 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
சுடு நீர் - தேவையான அளவு
வாழையிலை - தேவையான அளவு

பிரதமன் தயாரிக்க :

தேங்காய் - 1 ; துருவியது
பாகு வெல்லம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் பல் – 1/4 கப்
வறுத்த முந்திரி - அலங்கரிக்க

செய்முறை :

அட மாவு தயாரிக்க :
வழிமுறை 1 ( பாரம்பரிய முறை )
**  அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, 2 மணி நேரமாவது நிழலில் உலர்த்த வேண்டும்.

**  பின்பு மிக்ஸியில் இட்டு மெல்லிய பொடியாக அரைத்து, ஒரு சல்லடையில் இட்டு நன்கு சலிக்க வேண்டும்.

**  பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு பிசிற வேண்டும்.

**  சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

வழிமுறை 2 (சுலப முறை )
**  அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, கிரைண்டரில் இட்டு சிறிது சிறிதாக நீர் சேர்த்து மை போல் அரைக்க வேண்டும்.

**  பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்

அட செய்ய :
**  வாழை இலைகளை 6 இன்ச் அகல துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

**  அவற்றை அடுப்பு தணலில் சில நொடி மேலும் கீழும் காட்டி, வாழை இலை இளகும் வரை  வாட்டி எடுக்கவும்.

**  இதற்கு இடையில், ஒரு பெரிய பாத்திரத்தில், நிறைய நீர் எடுத்து கொதிக்க விடவும்.

**  இந்த வாழை இலை துண்டுகள் ஒவ்வொன்றிலும், 2 தேக்கரண்டி மாவை வட்டமாக ஊற்றி, சுருட்டி, இரண்டு முனைகளையும் நூலால் கட்டவும்.

**  உடனே கொதிக்கும் நீரில் இந்த சுருளை போட்டு விட வேண்டும். இது மிகவும் முக்கியம்.

**  மாவு முழுதும் தீரும் வரை, இவ்வாறு சுருள்கள் செய்து கொதிக்க விட வேண்டும்.

**  சுருள்கள் நன்கு வெந்ததும், மேலே மிதக்கும்.

**  அப்போது, வெளியே எடுத்து மாவு துண்டுகளை இலையில் இருந்து நீக்கி, 3-4 முறை குளிர் நீரில் அலம்ப வேண்டும்.

**  இவ்வாறு அலம்புவதால், அதன் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.

**  பிறகு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

மாற்று முறை :

கொதிக்க வைப்பது விட, நீராவியில் வேக வைப்பதும் சிறந்தது. உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.



பிரதமன் செய்ய :

**  துருவிய தேங்காயை மிக்சியில் இட்டு, முதலில் 1/4 கப் கெட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  பிறகு, 1 ½ கப் இரண்டாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  அடுத்து, 2 கப் மூன்றாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி, மூன்றாம் பால், வெல்லம் மற்றும் சர்க்கரையை கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

**  பிறகு இரண்டாம் பாலையும், அட துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

**  இப்போது தேங்காய் பல் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.

**  முதலில் எடுத்த கெட்டி பாலை சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து, நன்கு கலக்கவும்.

இதோ சுவையான அட பிரதமன் தயார் !


அனைத்து கேரளத்து தோழமைகளுக்கு 
யாழ் இனிதின் திரு ஓணம் ஆஷம்சக்கள் !





Yazh Inidhu wishes
‘ Happy Onam to All friends from God’s Own Country’













8 comments:

  1. திருவோண ஆஷம்சகள் தோழி.... அட பாயசம் நான் நிறைய முறை குடித்திருக்கிறேன்.... இன்று உங்களது பதிவில் பார்த்ததும் ஞாபகம் வந்துவிட்டது..... அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிடவேண்டும்.... அம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ

    ReplyDelete
  2. வாசிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சகோதரி...அருமையான டிப்ஸ்

    ReplyDelete
  3. வெல்லம் போட்டு பண்ற பாயசம் எனக்கு ரொம்ப புடிக்கும் எனோட அம்மா அடிகடி செஞ்சு குடுப்பாங்க பத்து வருடங்களுக்கு அப்புறம் நீங்க நியாபகபடுதுரிங்க மிகவும் நன்றி நண்பி வீ.கே ..tamildhesamchat.com

    ReplyDelete
  4. மாய உலகம், நாம் மறந்துவிட்ட பல சுவைகளில் அட பிரதமனும் ஒன்று .

    எங்கள் பகிர்வால் உங்கள் தாயின் கைமணம் நினைவுக்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

    ReplyDelete
  5. மாய உலகம், தமிழ் மணத்தில் தங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  6. கே.எஸ்.எஸ்.ராஜா சகோ, பார்க்கும்போதே , படிக்கும்போதே சுவைத்துபார்க்க தூண்டும் செய்முறைதான் சிறந்த செய்முறை.

    அந்த வகையில், பின்னூட்டம் அளித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு மனம்கனிந்த நன்றி.

    ReplyDelete
  7. வீகே, எங்கள் சமையல் செய்முறை மூலம் உங்கள் அன்னையின் நினைப்பை மீண்டும் மலரவைத்ததில் எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking